என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

27 November 2007

நீ

நீ காற்று என்றேன் உட்புகுந்து மூச்சனாய்

நீ மேகம் என்றேன் என் மீது மழை ஆனாய்

நீ நீர் என்றேன் ஆறாய் மாறி அழைத்து சென்றாய்

நீ நெருபென்றேன் என்னை உருக்கி உன்னுள் வார்தாய்

நீ நிலம் என்றேன் மடி கொடுத்து உறங்க வைத்தாய்

நீ காதல் என்றாய் நான் கவிஞனானேன்!!

விதவை


புள்ளி இல்லாத

கேள்விக்குறியாய் காத்திருக்கிறாள்

முற்றுப்புள்ளியாய் மாறுகிற

ஒற்றைப் புள்ளிக்காக........!

விதிவிலக்கு

சிம்மினி விளக்கைத் தீண்டும்

விட்டில் பூச்சியாய் சுற்றினாய்.

பருவமாற்றத்தால்,

இன்று நீ!

சீமை விளக்கை சுற்றும் விட்டில் பூச்சியாய்!

தேர்வில்(தேர்ந்தெடுப்பதில்)

மற்ற அக்றினைகளை மிஞ்சிவிட்டாய்...

நான் மட்டும் இங்கு விதிவிலக்காய்...

தேடுகிறேன்

தொலைநோக்குப் பார்வையை தொலைத்து விடுகிறேன்!

தோன்றுகின்ற வார்த்தைகளை தூக்கிலிடுகிறேன்!

கைது செய்யும் கண்களை கரைய வைக்கிறேன்!

சிந்தனையும் செயலயும் சிறையிலிடுகிறேன்!

எழுச்சி மிகுந்த எண்ணங்களை எரித்துவிடுகிறேன்!

இப்படி நிலவை விழுங்கிய இரவாய் விழித்திருக்க

நான் தோற்றுபோனவனா இல்லை?

உன்னுள் தொலைந்துபோனவனா?

26 November 2007

அப்பா வாசணை

அப்பா புகைகிறார் நடு வீட்டில், வழக்கமான வசவுகளில் இறங்கிய அம்மாவை பொருட்படுத்தாமல். புகைவாசணையின் அர்த்தங்கள் புரியாமலேயே நான். எப்போதும் புகைகிற அப்பாவை அலட்சியபடுதியபடியே படி இறங்கினேன், அடுத்த வாரம் ரூபாய் இருபத்தி ஐந்து ஆயிரம் இருந்தால் கல்லூரிக்குள் நுழையலாம் என்ற ஏக்கத்துடனேயே. பிறந்த நாள் முதல் எனக்கும் அப்பாவுக்குமான தூரத்தை இட்டு நிரப்பியவள் அம்மா. எதுவானாலும் அம்மாதான்.சாப்பாடு,காசு எதுவேண்டுமானாலும் கிடைக்கும் வசவுகளோடு சேர்த்து.என்னை திட்டவோ என் தவறை கண்டிக்கவோ விரும்பாத அப்பாவை நான் விரும்பவில்லை.பள்ளியில் ஆண்டு விழாவோ பெற்றோர் அழைபிற்கோ வராதவர் என்ன சாதிக்க விரும்புகிறார் என்பது புரியவில்லை அல்லது புரிய வயதில்லை. அலட்சியம் அதிகரித்து விட்டது, என்னிடம். "தம்பி"(அப்படித்தான் அழைப்பார்) நாளைக்கு தயாரா இரு - இது அப்பா. என்னுடன் புகையை கிளப்பிய படியே கிளம்பினார்.கல்லூரியில் சேர்த்து விட்டு கொஞ்சம் பணத்தையும் எனது பையில் வைத்து விட்டு போனார். ஆறாவது மாதம் முடிந்தாயிற்று கல்லூரி மாதிரி தேர்வு மதிப்பெண் சீட்டு வீட்டில் பெற்றோரை அழைத்தது. (சரி இல்லை என்றால் தானே பெற்றோரை அழைப்பார்கள்).இதுவரை எதற்கும் வராதவர் இதற்கா வரப்போகிறார்! எனது அலட்சியம் சதவிகிதம் கூடியது. அன்று வெள்ளிக்கிழமை சூரியன் உச்சத்தில். உணவை முடித்துக்கொண்டு நண்பனின் அறையில் படுத்தபடி நான். " டேய் உங்க அப்பா வந்திர்க்கருடா" என்றான் ஒரு நல்லவன். ஆவலுடன் தேடவில்லை.சற்றே நடந்து சென்று கல்லூரி வாசலில் இருக்கும் பெட்டிக்கடையோரம் பார்வையிட்டேன் தென்பட்டார் அப்பா, சிகரட் புகையின் மறைவிலிருந்து. சிறிதும் மலர்ச்சி இல்லை இருவரிடமும். காலில் கட்டு, செருப்பில்லாத வெறுங்காலுடன் நடந்து என்னிடம் வந்தார்.மதிபெண் சீட்டு அவர் சட்டைப்பையிலிருந்து எட்டிப்பார்த்தது.பயந்து நின்ற என்னிடம் பையிலிருந்து சீட்டுடன் ஒரு தொகையும் தந்து விட்டு சிறிய பார்வை ஒன்றையும் வீசிவிட்டு சற்றே சிரமப்பட்டு நடந்து சென்றார்.கையில் இருந்த சீட்டை பிரித்தேன் கல்லூரியில் கட்ட வேண்டிய மீதத்தொகையையும் கட்டிவிட்ட்ட தாகக் கூறியது. கலங்கிய கண் தேடியது அப்பாவை தூரத்தில் மறைந்தார் சிகரட் புகையினூடே. அது வரை வசப்படாத வாசணை அன்று வசப்பட்டது. அது அப்பா வாசணை. .