என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

28 February 2011

பயணம்(5) - காங்கோ

காங்கோ(Democratic Republic of Congo) சுருக்கமாக DRC. தமிழில் ஜனநாயக குடியரசு காங்கோ(ஏதோ என்னால் முடிந்த மொழி பெயர்ப்பு).
1908ல் பெல்ஜிய நாட்டின் காலனியாக இருந்த பெல்ஜியம் காங்கோ 1960ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. முந்தய அறுபதுகளில் சரியான அரசியல் அமைப்பு குறைபாடுகளினால் நிலையான சமூகத்தை உருவாக்க இயலவில்லை. 1965 இல் மொபுடு(Mobutu) என்பவரால் ஆட்சி கைப்பற்றப்பட்டு சர்வதிகார அட்சி நடை பெற்றது. அப்போது பெல்ஜியம் காங்கோ ஜைரே(zaire) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முப்பத்தி இருண்டு வருட சர்வாதிகாரதினாலும் முறை கேடான ஆட்சியினாலும், இனக்கலவரங்கள் உள்நாட்டு சண்டைகள் என்று அமைதியிழந்து காணப்பட்டது. பிறகு ருவாண்டா மற்றும் உகண்டா நாட்டின் உதவியுடன் லாரன்ட்கபிலா (Laurent Kabila) என்பவரால் ஆட்சி கைப்பற்றப்பட்டு ஜனநாயக குடியரசு காங்கோ(Democratic Republic of Congo) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்கிறது வரலாறு.  
கின்ஷாசா வை தலைநகராகக் கொண்டது DRC(ஜனநாயக குடியரசு காங்கோ). நான் கின்ஷாசாவிற்கு பயணம் செய்வது குறித்து நண்பர்களிடம் பேசிய போது  திரைபடங்களில் வருவது போல் பயங்கரமாக இருக்கும் பார்த்துக்கொள் என்றும் பயம் கலந்த நம்பிக்கை தந்து அனுப்பினர். திருமணத்திற்குப் பிறகு செல்லும் முதல் பயணம் என்பதால் லேசான பயமும் புதிய இடம் என்பதால் சிறு குழப்பமும்
இருந்தது. 

2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சனிக்கிழமை இரவு துபாய் விமான நிலையம், மீண்டும்மொரு கென்ய விமானப் பயணம், நைரோபி சென்று மூன்று மணிநேரம் கழித்து கின்ஷாசா நோக்கிப் பறந்தது. இந்த முறை என் தனிமையையும் சேர்த்து சுமந்து சென்றது விமானம். கின்சாசாவில் நுழைவ தற்கு விசா விமான நிலையத்திலேயே கிடைக்கும். அதற்க்கு சக வர்த்தக நிறுவனத்தின் அழைப்பு கடிதம் வேண்டும். விசா கட்டணமாய் நூறு அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. 


விமானம் தரை இறங்கும் சமயம் இறை நோக்கி வட்டமிடும் பருந்தாய் வட்டமிட்டது. விமான நிலையம் தென்ப்படுமுன் பெரிதாக தெரிகிறது காங்கோ ஆறு. இதுவும் ஆப்பிரிக்காவில் அகலமான மற்றும் ஆழமான ஆறுகளில் முக்கிய ஒன்றாக சொல்லபடுகிறது. ஆற்றங்கரையிளிருந்து சுமார் மூன்று மயில் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம். பச்சை பசேல்லென்று காணப்படுகிறது. அழகு இருக்குமிடத்தில் ஆபத்தும் இருக்குமென்பது இயல்பு தானே. விமானம் தரை இறக்கப்பட்டது, சுற்றிலும் பச்சை வர்ணம் தவிர லேசான குளிர் தென்றலும் சேர்ந்து வியப்பூட்டுகிறது. விமான நிலைய அலுவலகம் நம்மூர் பஞ்சாயத்து அலுவலகம் போல காட்சி அளிக்கிறது. அனைவரும் விசா பெறுவதற்கான ஆவலோடு விரைகின்றனர். நானும் எனது கணினி பையுடன் தயங்கியபடி செல்லுகிறேன். தயக்கதிர்க்கான காரணம் ஏதோ ஒரு இனம்புரியாத பயம் எனக்கு. அகத்தின் அழகு முகத்தில் தெரிந்து விட்டது போலும். விமானம் நிலைய அலுவலக வாயிலில் ஒரு காங்கோ நாட்டு பிரஜை ஆங்கிலத்தில் உனது கடவுச்சீட்டை கொடு என்று அதிகாரத்துடன் கேட்க, நானும் பையிலிருந்து எடுத்து காண்பிக்க இந்தியன் என்று உறுதிகொண்டதை தொடர்ந்து அவன் விரைவாக நடக்கலானான். இதற்க்கு முன் சாம்பியாவில் தொழில் தோழர் ஒருவர் சொன்னது நினைவிற்கு வந்தது. கடவுச்சீட்டை யார் கேட்டாலும் கொடுதுவிடாதே, யாரேனும் தெரியாத ஆள் பிடிங்கிக்கொண்டு போக வாய்பிருக்கிறது என்றும் இது தனக்கும் ஒரு முறை நடந்ததாக கூறினார். நான் சில நொடிகளில் சுதாரித்து என்னுடைய கடவுச்சீட்டை திருப்பி தருமாறு ஆங்கிலத்தில் கேட்டேன். என்னை முறைத்தான். கடவுச்சீட்டைப் பார்த்த பிறகு    மஞ்சள் காய்ச்சல்(yellow fever) அட்டை கேட்டு வாங்கிக்கொண்டான். பிறகு அழைப்புக் கடிதம் பெறப்பட்டன. எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை அழைத்துப்போக வரும் பிதாமகன்கள் யாரும் வரவில்லையா என்றும் வந்தாலும் அவர் விமான நிலைய அலுவலகம் வரை வர வாய்ப்பில்லை என்றும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். நான் பேசும் எதுவும் அவன் காதில் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை. பிறகு தான் தெரிந்தது அங்கு பிரெஞ்சு மொழி தான் உதவும் என்றும் ஆங்கிலம் பெரும்பாலும் உதவாதென்றும். எனது கடவுச்சீட்டை பெரும் ஆர்வத்தில் அவனிடம் சிறு பலத்த குரலில் வினாவினேன். என்னை இவன் திரும்ப பார்த்து பிறகு வேறு ஒரு ஆள் கையில் கொடுத்து அனுப்பி விட்டான். அவன் எந்த பதிலும் அளிக்காத நிலையிலில் என்னடா இது சோதனை என்று நின்ற எனக்கு , இருபது அடி தூரத்தில் ஒரு தெய்வமகன் என் பெயர் எழுதப்பட்ட அட்டையுடன் கையாசைத்தான். அவனை கண்ட பிறகே நுரையீரல் தள்ளப்பட்டு மூச்சு வெளியே வந்தது. அதுவும் குடி நுழைவு(immigration) வரை அவன் வந்தது ஆச்சர்யம். பொதுவாக வேறு எந்த நாட்டிலும் பயணிகள் தவிர அனுமதிக்கப்பட மாட்டார்கள். என்னை அழைத்து போய் சிறு அறையில் அமர சொல்லிவிட்டு முப்பது நிமிடம் மறைந்து போனான். அரை மணி நேரத்தில் என்னைப் போலவே வேற்று சில ஆப்ரிக்க நாட்டவரும் அவதிப்படுவது கண்டு என்னை தேற்றிக்கொண்டேன். சிலர் ஆங்கிலமும் தெரியாமல் பிரெஞ்சும் தெரியாமல் அவதி படுவது தெரிந்தது. முப்பது நிமிடம் கழிந்தது என்னை அழைத்துக்கொண்டு சென்றான் அந்த தெய்வமகன் அவனது பெயர் நினைவில் இல்லை. வெளியில் சென்ற பிறகு தான் எனது பயணப் பெட்டி மற்றும் கடவுச்சீட்டை பற்றியும் நினைவு வந்தது. என்னை காரில் ஏறி செல்லுமாறும் மற்றவைகள் பிறகு வருமென்று பணிவாக சொன்னான். விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்பொழுது எனது கடவுசீட்டு(passport) விசா என்று எதுவும் என்னிடம் இல்லை. இப்படி இவை எதுவும்  இல்லாமலே நான் வெளியே அனுமதிக்கப்பட்டேன் என்பது இலஞ்சத்தின் ஆழத்தை உணர்த்தியது. 

கின்ஷாசாவிலிருந்து ப்ரசவில்லி

செல்லும் வழியெல்லாம் ஒரு மாநகரத்திற்கு செல்லும் உணர்வே இல்லாமல் மாறாக ஒரு மலை கிராமதிருக்கு செல்லும் உணர்வே தோன்றியது. சுமாறாக முக்கால் மணிநேர பயணம். வரும் வழியில் தார் சாலைகளில் தார் களவாடப் பட்டிருந்தது. சாலையின் இரு பக்கங்களிலும் அடர்த்தியான மரங்கள் காணப்படுகின்றது. மிருதுவான காற்று மண்வாசனை என்று எல்லாம் பயம் கலந்த புதிதாக இருந்தது. சக வர்த்தக நிறுவனம் முழுவதும் இந்தியர்களால் நிரப்பட்டு,  அவர்களுக்கு வீடு மற்றும் போக்குவரத்து என்று சகலமும் தரப்பட்டிருந்தது, அதே பகுதியில் நாங்கள் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாங்கள் என்றால் என்னோடு பணிபுரிய இந்தியாவிலிருந்து ஒரு தொழில் தோழன் ஒருவனும் ஓரிரு நாட்கள் பின்பு வந்தான். கின்ஷாசாவில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. பொது இடங்களில் புகைப்படம் எடுப்போர் மீது அபராதம் விதிக்கப்படும். புதிதாக வந்திறங்கியவர்கள் இதை அறியாமல் எடுத்துவிட்டால் திருவிழா ஆட்டைபோல் ஆக்கிவிடுவார்கள். வந்திறங்கிய உடனே இருநூறு டாலர்கள் அபராதம் கட்டிய பின்னரே நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கப் பட்டார் என் அருமை தோழர்.

என்னுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பிலிருந்த நபர் என்னை வரவேற்றார். பிறகு நான் தமிழன் என்பதால் அங்கு சில தமிழர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு அறிமுகமும் செய்து வைத்தார். எனக்கான அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு பிறகு கீழ்த்தளத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைப்பு. உள்ளே சென்ற பின்னரே அந்த கண்கொள்ளாக்காட்சி. நம் மக்கள் ஒரு ஐந்தாறு பேர் அமர்ந்து நண்நீராடிக் கொண்டிருந்தனர்(சரக்கு அடிச்சிட்டு  இருந்தாங்கன்றாத இத விட வேற எப்படி சொல்றதுன்னு தெரியல). வேறு ஒரு நாட்டில் வேறு ஒரு உலகில் வேறு ஒரு கலாசச்சார சூழலில் நம் தமிழ் மக்களை அவரவர் மண்வாசனை கமழ காணும்பொழுது சுகமே சுகம். அங்கு தங்கி இருந்த மூன்று வாரங்களும் இனிய இந்திய வகை உணவு கிடைத்தற்கு நமது மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்திய உணவு வகைகள் சமைத்து ஒரு காங்கோ குடிமகன் என்பது என் புருவங்களை உயர்தச் செய்தது. 

அங்குள்ள அந்நாட்டு மக்கள் பெரும்பாலும் பிரெஞ்சு மொழியையே உபயோகிக்கின்றனர். அரசு மொழியும் பிரெஞ்சு மொழிதான். பிரெஞ்சு தெரிந்தால் மட்டுமே காங்கோவில் உயிர்பிக்க முடியும் என்பதை, பள்ளி பாடத்தைக் கூட நேரம் ஒதுக்கி படித்திராத நமது மக்கள் இரவு நேரங்களில் பிரெஞ்சு படிப்பதை பார்க்கும்பொழுது உறுதிகொள்ளச் செய்கிறது. நமது மக்கள் எப்பாடு பட்டாவது பிரெஞ்சு பேசுவதைக் காண பெருமையாக உள்ளது. தினம் இரவு உணவு என் அறையின் அருகில் தங்கியிருந்த இரு தமிழ் நண்பர்கள்வுடனே கழிந்தது.

நான் கண்ட வரை அங்குள்ள மக்கள் foot long size என்று சொல்லப்படுகிற அளவு நீளமான ரொட்டி ஒன்றும் ஒரு கொக்கா கொலாவும் உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுவதால் அதன் விலையும் சற்று அதிகம் தான். இதனால் நுகர்வோர் எண்ணிக்கை  அளவில் குறைந்து காணப்படுகிறது. கலாச்சாரத்திலும் மற்ற ஆப்ரிக்க நாடுகளை ஒத்து இருக்கின்றது. அங்குள்ள இந்திய தூதரகத்தின் தூதர் ஒரு தமிழர் என்று நம் நண்பர்க்ளிடம் பேசும் பொழுது தெரிய வந்தது.

கின்ஷாசா நகரத்தை வெளியே சென்று காணும் வாய்ப்பு நண்பர்களின் மூலம் கிடைத்தது. இங்கும் சாலை நெருக்கடி, சாலை வசதியின்மை, பொது மக்கள் போக்கு வரத்து என்று அடிப்படை வசதிகளை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. பேரங்காடிகள்(சூப்பர் மார்க்கெட்) மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக அருகருகில் அங்காடிகள் அமைந்து இருக்கின்றது. இரவில் செல்லும்பொழுது கூடியவரையிலான பாதுகாப்பு அவசியம் அதற்க்கு பிரெஞ்சு முதல் கட்ட ஆயுதம் எடுத்து கொள்ளலாம். நாம் பிரெஞ்சில் வணக்கமோ நன்றியோ கூறும்பொழுது நாம் அங்கு அங்கிகரிக்கப்படுகிறோம். 

சுத்தமான காற்று, பச்சை மரங்கள், பசும்புற்கள் என்று ஓரிரு நாட்களில் இயற்கையோடு நாமும் ஒன்றி விடுகிறோம். உலகிலேயே ஒரு ஆற்றின் இருகரையில் இரு நாடுகளின் தலைநகரம் அமைந்து இருப்பது இங்கு மட்டுமே. கின்ஷாசா (DRC காங்கோவின் தலைநகரம்) ஒரு கரையிலும் ப்ரசவில்லி(Brazaville) (RC காங்கோவின் தலைநகரம்) மறுகரையிலும் அமைந்துள்ளது மிக அழகு.

காங்கோ ஆற்றின் கரையோரம் எல்லைப்படைக்கள் ஆயுதங்களுடன் கண்காணிக்கப்படுகின்றனர் நாட்டின் எல்லை என்பதால். ஆற்றின் துறைமுகத்தின் வழியே ப்ரசவிள்ளே விற்கு(Brazaville) வணிகம் செய்யப்படுகின்றது. எங்களோடு வணிகம் செய்யும் நிறுவனத்தின் விருந்தினர் விடுதி ஒன்று கரையோரத்தில் உள்ளது. அங்கு செல்லும் பொழுது இரும்பு கதவை திறக்கும் காவலர்கள் ஒரு சலாம் போட்ட பின்னர் பணம் கேட்கிறார்கள் குறைந்த பட்சம் ஒரு சிகரட்டேனும் கேட்டு வாங்குகிறார்கள். இது பற்றி நண்பர்களிடத்தில் பேசும்பொழுது இவர்களுக்கு ஒழுங்காக சம்பளம் வழங்க படுவதில்லை என்பது தெரியவந்தது. இவர்கள் கேட்டு வாங்குவது சரி என்றே தோன்றுகிறது. இந்தியாவில் தேவைக்கு மேலும் கேட்டு வாங்குவது அநியாயமாக தொன்றுகிறது.

மற்றுமொரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி. ஒரு நாள் இரவு விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தோம். சென்றது ஒரு நட்சத்திர உணவகம் அதன் பெயர் தாஜ் என்று நியாபகம். பாழடைந்த கட்டடத்தின் ஏழாவது மாடியில் அமைந்திருந்தது. அங்கு சரியான விளக்கு வெளிச்சம் காணப்படவில்லை. லிப்ட் என்று சொல்லப்படுகிற மின்தூக்கி ஒன்றில் தான் போகவேண்டும். ஒரு முறை செலுதுனர் உட்பட நான்கு பேர்தான் செல்ல முடியும். இந்த மின்தூக்கி தான் காங்கோவில் போடப்பட்ட முதல் மின்தூக்கி என்பது கூடுதல் செய்தி. அந்த நட்சத்திர உணவகம் பழங்காலத்து கோயில் போல காட்சியளிக்கிறது. அது இந்தியர்கள் நடத்துவதால் சுவையுள்ள எல்லாவித உணவும் கிடைகிறது. விலைவாசி அதிகம் என்று சொல்லப்படுகிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு தொல்லாயிறத்து பதினைந்து ஃபிரான்க்கள்(franc).  போதிய வளங்கள் இருந்தும் இன்னும் பின் தங்கிய நாடாகவே இருப்பதற்கு காரணம் ஊழல் அரசியலும், படிப்பறிவும் என்று சொல்லபடுகிறது.
கொரில்லா

சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் வருகின்றனர். பெரும்பாலும் மேர்கத்தவர்களே கானபடுகின்றனர். காங்கோ அடர்த்தியான காடுகள் கொண்டது. கொரில்லா வகை குரங்குகள், நீர் யார்னைகள், மலைப்பாம்புகள், ஒகாபி என்று அழைக்கப்படும் மான் வகையாராக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

வந்த வேலை வெற்றிகரமாக முடிந்து திரும்பும் வேலை வந்தாகி விட்டது. காங்கோவில் தொழில் சார்ந்து வருவோர் போவோரை விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்து வருவதற்கும் மீண்டும் வழி அனுப்பவும் ஏஜென்ட் என்று சொல்லப்படுகிற முகவர்கள் உள்ளனர். அவர்களிடத்தில் பணத்தை கொடுத்து விட்டால் பயணிகளைப் பற்றி சம்பம்தப்பட்ட நிறுவனம் கவலையின்றி இருக்கலாம். அவர்களுக்கு protocol officer என்று பெயர். அப்படி ஒரு முகவர் எங்களை விமான நிலையதிதில் ஒரு ஓரத்தில் அமர வைத்து விட்டு சிறிது நேரத்திற்கு பின் பயணத்திற்கு தேவையான அணைத்தையும் தந்து வழியனுப்பி வைத்தார். ஒருவழியாக துபாய் வந்து சேர்ந்தாயிற்று. இருந்தாலும் கின்ஷாசா வாசனை எனது நாசியிலிருந்து போக மறுக்கிறது.  

மீண்டுமொரு பயணத்தில் சந்திப்போம்.

பயணம் தொடரும்.....

படங்களுக்கு....

2 comments:

  1. பயணம்

    http://bloggersbiodata.blogspot.com/2011/04/blog-post_6316.html

    ReplyDelete